Friday, November 2, 2018

வாய்ப்பு

    வாய்ப்புகளை தேடாமல் உருவாக்க கற்றுக் கொள்ளோம்!!!
பெரும்பான்மையோர் வாழ்வு வாய்ப்பு தேடி அலைவதிலேயே முற்றுப் பெறுகிறது... பணம் இல்லை, பிறர் ஆதரவு இல்லை, நல்ல சூழல் இல்லை என புலம்பி ஆயுளை கடத்துபவர் பலர்...
வெற்றியின் சரித்திரத்தை புரட்டி பார்த்தால் அமைந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டவர்களை விட .. தனக்கென வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டவர்களே அதிகம் இருப்பார்கள்... இயலாது என்ற வார்த்தைக்குள் முடங்காமல் எந்த சூழலையும் தனக்கேற்ப மாற்றி மகிழ்வுடன் ஏற்பவர்களே சாதனையாளர்கள்...
த்தகைய மனம் படைத்தவர்கள் திறமையும், எதையும் தாங்கும் வலிமையையும் அதிகம் பெற்றிருப்பர்... யாரும் பாதுகாக்காத காட்டுமரம் வலிமையோடு வளர்தலை போல தானே வலிமையோடு வளர்ந்து நிற்பர்....
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது.. அதை வெளியில் தேடாமல் நமக்கு கிடைத்ததைக் கொண்டு அதை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்... வாய்ப்புகளை யாசகமாக பெற்று அடிமையாகாமல்.. தானே உருவாக்கி தலைமை பண்போடு மிளிர முயல்வோம்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

பிரிந்து விடாதே

பிரிந்து விடாதே என
அவள் போராடுவதும்!!
பிரிந்து விடுவாயா என
 அவன் வாதாடுவதும்!!
அவன் தேற்றுவான் என தெரிந்தே
அவள் கண்ணீர் சிந்துவதும்!!
அவள் கண்ணீரை கண்தாண்டவிடாமல்
அவன் கண்களால் ஏந்திக் கொள்வதும்!!
முடிந்த ஊடலை அவனது
தேறுதலுக்காக அவள் நீட்டிப்பதும்!!
பொய் ஊடல் என அறிந்தும் அவள் 

புன்னகைக்கும் வரை அவன் 
சமாதானம் செய்வதும்!!
அன்பில் சிறந்தவர் யார் என 

மயங்கத் தான் வைக்கிறதே!!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

புரிதல்

புரியாமல் கொல்வோரையும் புரிந்துக் கொள்வோம்!!!
தவறான புரிதல் சில நேரங்களில் நெருங்கிய நட்பையோ, உறவையோ விலக செய்து விடும்... பேசும் வார்த்தைகளோ, செயல்களோ தவறான புரிதலால் தடுமாற்றம் ஏற்படுத்தி மன வாட்டம் செய்து விடும்.. மன வாட்டம் போக்கும் மருந்து மனம் விட்டு பேசுதலே...
நன்மையோ தீமையோ மனம் விட்டு பேசும் போது பிரிதல் தவிர்க்கப்படும்... விரிசல் அதிகரிக்காமல் காக்கப்படும்... வார்த்தை ஒலிப்பில் கவனமும், சூழலுக்கு தகுந்தவாறு பேசுதலும் தவறான புரிதல் ஏற்படாமல் தவிர்க்கும்... எண்ணம் போல் வீசாமல் பிறர் மன நிலை அறிந்து பேச வேண்டும்...
விட்டுக் கொடுத்தலும் , ஏற்றுக் கொள்ளுலும் தவறான புரிதலை மேலும் தவிர்க்கும்.. அது உறவை தக்க வைத்து அன்பை கூட்டி தரும்... தவறான புரிதலை அப்படியே விட்டு விடாமல் அதனை விளக்கி புரிய வைத்து உறவை விலகாமல் காத்திடுவோம்.
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், குழந்தை மற்றும் குளோஸ் அப்

அவன் வருவான்

அவள் ஊடல் கொள்வதும்!!
சண்டையிடுவதும்!!
கோபம் கொண்டு பாராமுகமாய் செல்வதும் !!
அவன் பார்க்கத்தான்!!
அவன் வருவான்!!
பின் தொடர்வான்!!
வாட்டம் போக்குவான்!!
மனமாற்றம் செய்வான்!!
என அவள் அறிவாள்!!
ஊடல் கொண்டாலும்
தன்னை ஒரு கணமும்
பிரியாள்!!
வேறு எதுவும்
அறியாள்!!என அவனும் அறிவான்!!
படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

நீயே நான்

அவ்வப்போது நினைக்கிறாய் நீ!!!
எப்பொழுதும் நினைக்கிறேன் நான்!!!
எனை காட்சியாக காண்பதால்
கடந்தவுடன் மறக்கிறாய்!!!
உனை கண்களாய் நினைப்பதால் 

உடன் இணைத்து செல்கிறேன்!!!
எனக்காக காலம் ஒதுக்குகிறாய்

 உனக்குள்!!!!
நீயே கால சக்கரமாக சுழல்கிறாய்

எனக்குள்!!!
நீ என்னை தீயாக 

நினைக்கிறாய்!!!
நான் என்னை நீயாக
நினைக்கிறேன்!!!படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்

மறதி என்பது வரமா? சாபமா?!!!!!

மறதி என்பது வரமா? சாபமா?!!!!!
மறதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பல மனங்கள் ஆறாத ரணமாகவே இருந்திருக்கும்... மறந்து விட கூடாது என சில நினைவுகளும் மறந்து விட வேண்டும் என சில நினைவுகளும் அனைத்து மனங்களிலும் இருக்கும்...
ஏற்பட்ட காயங்கள், பறிக்கப்பட்ட இழப்புகள், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மறக்கும் போது தான் பட்ட மரமாகி போன மனம் புதுமையை நோக்கி துளிர் விடும்... மறதி இல்லையெனில் அது எப்போதோ மண்ணோடு மக்கியிருக்கும்... மறதி ஒன்றே மனதை மீட்டு மறுபிறவி எடுக்க செய்து புதுவித பயணத்திற்கு வழிகாட்டும்... மறதி இல்லை எனில் மரணித்த இதயங்களின் கூடமாக உலகம் மாறியிருக்கும்... இத்தகைய நிலையில் மறதி என்பது ஒரு வரமே....
அதே வேளையில், அன்புக்குரிய மனங்களில் நம் நினைவுகள் அழிந்து மறதி ஏற்படும் போதும், மறக்க கூடாத பொற்கால நினைவுகள் நம் மனம் விட்டு போகும் போதும் அது சாபம் என தோன்றும்....
எதுவாகினும் மறதி போற்றுதலுக்குரியதே .. அது பகையை ஆற்றி பழிவாங்கும் எண்ணத்தை குறைக்கும்... உறவை தேற்றி உடைந்த மனதை ஒட்ட வைக்கும்... தோல்விகளால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக மாறி வெற்றி எனும் விருந்தை ஊட்டும்...
மறக்கவேண்டியவற்றை மறந்து இறந்த கால நிகழ்வை எண்ணி வருந்தாமல் வருங்காலத்தை வசந்தமாக்குவோம்..

Saturday, October 20, 2018

துரோகம்....

      எதிரியாக இருந்தாலும் துரோகியாக மாறாத நிலை பெறுவோம்!!!!
எதிர்ப்பு கோபத்தை வெளிப்படுத்தும்... அதன் தாக்கம் விரைவில் குறையும்... அதனால் ஏற்படும் விழைவு மாறவும் வாய்ப்புண்டு... உறவுக்குள்ளோ, நட்புக்குள்ளோ ஏற்படும் மனகசப்பு எதிர்ப்பாக இருக்கும் போது அதன் வீரியம் குறைந்தவுடன் நதிகள் இணைவது போது சுவடு தெரியாமல் இணைந்துக் கொள்ளும்.... ஆனால் துரோகம் இணையாமல் பழிக்கு வழித் தேடும்... அது உதட்டில் தேனும் உள்ளத்தில் விஷமும் கொண்டு மெதுவாக கொல்லும்...
நன்முறையில் பயணித்துக் கொண்டே எதிர்பாராமல் படுகுழியில் தள்ளும்.. இது தவிர்க்கப்பட வேண்டியது.... நம்பிக்கை என்பது அனைவரிடத்தும் எளிதில் வந்துவிடுவதில்லை.... அதற்குரியவர்களாக ஒரு சிலரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.... ஆழ்மனதின் எண்ணங்கள், ஏக்கங்கள், நன்மை தீமை தனிப்பட்ட கருத்துக்கள் யாவும் கள்ளமின்றி பகிரப்படும்... அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதை விட கொடுமையான செயல் இல்லை எனலாம்....
ஒரு நண்பன் எதிரியாகலாம்' எதிரி நண்பனாகலாம்... ஆனால் ஒரு துரோகி நண்பனாக முடியாது... எதிர்ப்பின் வலியை மனது எளிதில் தாங்கிக் கொள்ளும்... துரோகத்தின் பழியை தாங்க முடியாது.... அது உடைந்த கண்ணாடிபோல மீண்டும் பழைய நிலை திரும்பாது....
பல சரித்திர வரலாற்றில் கூட எதிரிகள் இன்றும் வீரத்துடன் போற்றப்படுகின்றனர்... ஆனால் துரோகிகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் தூற்றப்படுவர்... அவர்களின் துரோக வடு வரலாற்று பக்கங்களையும் அழுக்காக்கிவிடும்.... அவ்வளவு எளிதாக மறைவதில்லை....
யாரேனும் உங்களுக்கு பகையாக மாறினால் எதிர்த்து நின்று போராடுங்கள்... இல்லையேல் அதனினும் சிறப்பாக மெளனமாக விலகி செல்லுங்கள்... துரோகத்தின் வழி பதில் அளிக்காதீர்.... எட்டி நின்று வாள் வீசினாலும் பரவாயில்லை கட்டியணைத்து முதுகில் குத்தாதீர்....

 அதனால் வலியோடு .பழியும் வந்து சேரும்.....
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

தவிப்பு......

அடிக்கடி தவிக்க விட்டு செல்வது சுயநலமா? சூழ்நிலையா!!!!
தவிக்க விட்டு செல்பவர்களையே இடைவிடாது எண்ணுவது முடிவிலா அன்பா?
முட்டாள் தனமா!!!!
அவன் தன் பணியைத் தொடர!!
அவள் மனம் அவனைத் தொடர!!
சிரித்து பேசியகாலத்தை மறந்து
அவன் மறைய!!
அழகிய அந்த நாட்களை எண்ணி
அவள் உறைய!!!
தேவையில்லையென இடையில் விட்டு
செல்லும் மனமே!!!
தெளிவிலா பயணத்தை தொடராமல்

 இருந்திருந்தால் நலமே!!!
 படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்

Wednesday, October 17, 2018

நினைவுகள்...

கடல் அலைகள் கரைத் தொடுவதை போல ... மனதில் எழும் நினைவலைகள் வாழும் காலம் வரை தொடர்ந்து கடந்த கால நிகழ்வை தொட்டு விட்டு தான் திரும்புகிறது ... அவற்றுள் சில சுகமான நினைவுகள்... சில சுமையான நினைவுகள்...
நினைவு சில சமயம் மனதின் வடுபட்ட காயத்தை கிளறி விடும் கத்தியாகவும் ... சில சமயம் காயத்தை ஆற்றும் சக்தியாகவும் மாறிவிடும்... நினைவுகள் கடந்த கால நிகழ்வுகளை ஒரு கோர்வையாக கண் முன் காட்டும்... அதில் சிறு வயதிலிருந்து வாழ்ந்து பயணித்த பாதைகள் புலப்படும்....
சிலர் மலர் நிறைந்த சோலையில் தென்றலுடன் பயணித்திருப்பர்... சிலர் மணல் நிறைந்த பாலையில் வாடைகாற்றுடன் வாழ்ந்திருப்பர்.... கடந்து வந்த பாதை அதற்காக வழிகாட்டிய உள்ளங்கள் ... தடை செய்த பள்ளங்கள் அனைத்துமே நினைவுக்கு வரும்... சில மகிழ்ச்சியான நினைவுகள் தற்போதைய நிலையில் நினைக்க விரும்பாத வகையிலும் .. சில சோகமான நினைவுகள் தற்போது நினைத்து பார்த்தால் சுகமானதாகவும் தோன்றும்....
சில நினைவுகள் கண்களை குளமாக்கும்.. மனதை ரணமாக்கும்... சில வண்ணத்து பூச்சியாய் மனதை பறக்க விடும்.. மனதை தேனில் மிதக்கவிடும்...
இத்தகைய நினைவுகள் நாம் செய்த தவறுகளை மீளாய்வு செய்து நம்மை பக்குவப்படுத்தும்.... வருங்கால வாழ்வுக்கான வழிகாட்டியாக மாறும்.... கடந்து வந்த வாழ்வு முறை, சூழ்நிலை, நட்பு, உறவு, காதல், கடமை, அனைத்தையும் இறுதி வரை மனதில் மறையாமல் யாருக்கும் தெரியாமல் புதுபித்துக் கொண்டே இருக்கும்... நம் விபரம் அறிந்த நாளில் இருந்து நம் நினைவலைகளை மீட்டினால் அது ஒரு காட்சி படமாய் கண் முன் வந்து நவசர உணர்வை நமக்கு விருந்தாக அளித்து விட்டு செல்வதை காணலாம்... இவற்றையும் அவ்வப்போது மூடியுள்ள மன திரையை விலக்கி உணர்ந்து தான் பார்ப்போமே...

அமைதி!! அமைதி!! அமைதி!!

அமைதி!! அமைதி!! அமைதி!!
அமைதி பல்வேறு சூழலில் பல்வேறு பொருள்படுகிறது... அமைதியான சூழல் கவிதைக்கும் , கற்பனைக்கும் வழிவகுக்கிறது... யாருமில்லா தனி வெளியில் இயற்கையின் அழகில் அமைதியான தெளிந்த நீரோடை போன்ற மனதுடன், இரைச்சலற்ற நிலையில் பல இனிய கற்பனைகள் வந்து சேரும்....
அமைதியை மெளனத்துடன் ஒப்பிட முடியாது... அது மெளனம் தாண்டிய நிலை... அமைதிக்கு பல முகங்கள் உண்டு ..அது பல நிலைகளில் பல அர்த்தம் காட்டும்.... தாயின் கருவறையில் நிலவும் கள்ள மற்ற அமைதி ...இந்த அமைதி மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.... ஆழ்ந்த உறக்க நிலையில் ஆழ் மனதும் அயர்ந்து தூங்கும் அமைதி ... இது அனைவருக்கும் கிடைத்து விடாத வரம்..... யாருமற்ற தனிமையில் தவிக்க வைக்கும் அமைதி ... .இதில் உடல்தனித்திருக்கும்.. உள்ளம் கொதித்திருக்கும்.... உறவுக்கு இடையே நிலவும் அமைதி ... இது புறக்கணிப்பின் உச்சமாக அமையும்....
நண்பர்களுக்கு இடையே நிலவும் அமைதி ... .அது கலகலத்த உள்ளத்தில் ஏற்பட்ட திடிர் தாக்குதலாக இருக்கும்.... காதலர்களுக்கு இடையே ஏற்படும் அமைதி சில சமயம் ஊடலின் தவிப்பாகவும் .. சில சமயம் உள்ளத்தின் பிணைப்பாகவும் இருக்கும்... அரங்கத்தில் நிலவும் அமைதி கவனத்தின் ஈர்ப்பை குறிக்கும்... ஆலயத்தில் நிலவும் அமைதி அற்பணிப்பு மனதின் தெளிவை விளக்கும்... கடும் கோபத்தின் அமைதி பழிக்கு வழித்தேடும்....
தியானத்தில் ஏற்படும் அமைதி மனத்தெளிவை ஊட்டும்.... முதுமை அடைந்து உலக வாழ்வு இதுதான் என்று உணர்ந்த நிலையில் வரும் அமைதி ... இது வெட்ட வெளிபோல் இருக்கும்.... மரணத்தின் பிடியில் மாட்டி உயிரற்ற உடலாய் மாறிய பின் வரும் அமைதி தாயின் கருவறையை மீண்டும் நினைவூட்டும் ...... அமைதியின் சாயல் வாழ்வு முழுதும் நம்மோடே பயணிக்கும்... அதற்கு என்றும் அமைதியில்லை..

Monday, October 8, 2018

"நீயும் நானும் "

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை மற்றும் வெளிப்புறம்பார்த்துக் கொண்டே இருக்க தூண்டும்!!
பார்வையில் காட்சி கிடையாது!!
பேசிக் கொண்டே இருக்க வேண்டும்!!
வார்த்தையில் பொருள் கிடையாது!!
அருகிலேயே இருக்க வேண்டும்!!
அவசியம் ஏன் என தெரியாது!!
நினைவிலேயே மூழ்க வேண்டும்!!
நியதி எதுவும் கிடையாது!!
கனவிலேயும் வரவேண்டும்!!
கால நேரம் கிடையாது!!
மனதிலேயே வாழ வேண்டும்!!
மாற்றம் என்பது கிடையாது!!
ஆம்.. காதல் உலகு வரையறையற்றதே!!
அதில் "நீயும் நானும் " என்பதே தவமாகும்!!
உண்மை அன்பே பெறும் வரமாகும்!!

புறக்கணிப்பு

புறக்கணிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!!!! எதுவும் நன்மைக்கே... புறக்கணிப்போ, விட்டு விலகுதலோ ஏற்படும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும் பெற வேண்டும்... தன்னம்பிக்கையுடன் அதை கை நீட்டி வரவேற்க வேண்டும்... நமக்காக இல்லாமல் தேவைக்கு நம்மை நாடும் சிலரின் அன்பை புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக அறிந்துக் கொள்வேமே.... அவையே நம்மை நன்முறையில் செதுக்குபவை.. எப்போதும் எல்லா இடத்திலும் நாம் மதிப்புடன் கொண்டாடப்படும் போது... வாழ்கை சூழலின் மறுபக்கமும் , துரோகத்தின் காட்சியும், வெறுப்பின் சூழ்ச்சியும், அகம்பாவத்தின் ஆட்சியும் அறிய முடியாமலே போய் விடும்...
புறக்கணிப்பும், வெறுப்பும் நம் மீது உமிழப்படுவது பலவீனம் அல்ல.. அது நம் மனபலம் அறியும் வாய்ப்பு ... அது நாம் அன்பானவர்கள் என்று எண்ணியிருந்த சிலரின் முகமூடியை தள்ளி விட்டு செல்லும் புயல் காற்று... அதை தைரியத்தோடு எதிர்க் கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள்...
உறவோ, நட்போ நம்மை தேவைக்கும், நேரத்திற்கும் பயன்படுத்தி பிறகு புறக்கணித்து உதறி தள்ளுபவர்களை நாமும் புறக்கணிக்க கற்றுக் கொள்வோம்... .புரியாதவர்களிடம் தேடி சென்று வாடி நிற்காமல் ... விலகி நின்று வாழவும்,வாழவிடவும் அறிந்துக் கொள்வோம்... உண்மை அன்பை இழப்பதை விட அவர்களுக்கான மாபெரும் தண்டனை எதுவும் அளித்து விட முடியாது... புறக்கணித்தவர் முன் புகழோடு வாழுங்கள்... யாரிடமும் அதீத அன்பையோ வெறுப்பையோ காட்டாமல் உப்பை போல அளவோடு பழகுங்கள்... நம் அன்பை முழுமையாக அறியாதவரிடம் காட்டும் போது அது கடலில் இட்ட சர்க்கரை போல பலனை அறிய முடியாது போய் விடும் ... ஆகவே புறக்கணிப்பவர்களை புறம் தள்ளி அளவோடு அன்புக்கொண்டு வாழவும் கற்றுக் கொள்வோம்...

அவள் நினைவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை 
அவளில்லா நாட்களில் ......
மலர்களும் மலர்ந்திட மறந்தது!!
தென்றலும் தழுவிட மறந்தது!!
வெண்ணிலா குளிர்ந்திட மறந்தது!!
விண்மீன் ஒளிர்ந்திட மறந்தது!!
சிந்தனை பிறந்திட மறந்தது!!
புன்னகை தவழ்ந்திட மறந்தது!!
கண்கள் உறங்கிட மறந்தது!!
இதயம் துடித்திட மறந்தது!!
அனைத்தும் தன்னிலை மறக்க!!
அவன் மட்டும் அவள் நினைவை மறவாதது ஏனோ!!!!!

மனம்

மனதின் நிலைபாடு அறிவோம்!!!
மனம் என்பது உருவற்ற உணர்வு.. ஆனால் நம் வாழ்நாளை செதுக்குவதில் அதற்கு தான் முதலிடம் ... அதனிடம் உண்டாகும் கேள்விக்கான பதில்களே நம் வாழ்வை நகர்த்தி செல்கிறது... மனம் இரண்டு வகை பாடு உடையது... முதல் வகை எதையும் தீர யோசிக்காது கவலை படாது தன் போக்கில் செல்லும் தன்மையுடையது... அதற்கு கட்டுப்பாடு கிடையாது பயம் அறியாது ... பல நேரம் நேர்பட பேசி பலரின் நிம்மதியை கெடுக்கும்... அவர்களே அவர்களுக்கு எஜமான்... அவர்களே சேவகன்.. இத்தகைய மனம் படைத்தவர்கள் இயல்பு வாழ்க்கையுடன் எளிதில் இயந்து வாழ்ந்துவிடுவர்...
மற்றொரு மன நிலைபாடு உள்ளதே அவர்கள் ஆகச் சிறந்தவர்கள்... ஆனால் அவர்களின் வாழ்வு பக்கம் முழுதும் மற்றவர்களால் நிரப்பப்பட்டிருக்கும்... சோகங்களும், துயரங்களும் அதிகம் கடந்திருக்கும்.. பிறர் நலன் கருதி பழியை தன் மீது சுமத்திக் கொண்டு சிறு குழந்தை போல் வாய் மூடி அழும்... இரக்கம் கொண்டு எவருக்கும் துடிக்கும்... சிந்தனை மிகுதியால் பலருக்கும் அறிவு சொல்லும்... உள்ளுக்குள் குழந்தை போல யாருடைய தேற்றுதலையோ தேடும்... புரியாதவர்களால் பழிக்கு ஆளாகும்... புரிந்தவர்களால் எளிதில் ஏமாற்றப்படும்.. நன்மைக்கும் குழையும்', தீமைக்கும் குமுறும் ... மொத்தத்தில் மெழுகை போல் தன்னை உருக்கி ஒளியாக்கும்...
முதல் வகை மனம் படைத்தவர் சுய சிந்தனையும், தற்சார்பும் கொண்டு தன் போக்கில் தனக்கென ஒரு பாதை வகுத்து வாழ்பவர்கள்... இரண்டாம் வகை மனம் பொது சிந்தனையும், பொது நலனும் பிறர் மகிழ்விற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்கின்றனர்...
இது போன்ற மன நிலைப்பாடு யாருக்கும் விரும்பி வருவதில்லை... அது இறையோ, இயற்கையோ நமக்கு அளித்த இயல்பு... இதை மாற்ற இயலாது ஆனால் சீர்படுத்தலாம்... இரு வகை மன நிலையையும் சற்று சீர்படுத்திக் கொண்டால்... சிறப்பான மாற்றம் பெறலாம்.... மனதை சீர்படுத்தி மாற்றம் பெறுவோம்

Tuesday, October 2, 2018

வறுமையின் துயரம்

வறுமையின் துயரம் அறிவோம்!!!!!
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை.. இந்த புகைப்படத்தைக் கண்ட ஒரு நொடி மனம் சற்று தடுமாறி தத்தளித்து கண்ணீர் துளி வந்தும் வராமலும் தங்கி தவிக்கிறது...
   வறுமை உருவாவதில்லை உருவாக்கப்படுகிறது... "தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதி உணவின்றி வாடி இறந்த உண்மை வரலாறு யாவரும் அறிந்ததில்லை... வறுமை எனும் நோயை ஒரு பட்சமான ஆடம்பரமும், தேவையற்ற விளம்பரமுமே கொண்டு சேர்க்கின்றன... நாம் இருக்கும் அனைத்தையும் அல்ல இயன்ற சிறிதை பகிர்ந்து அளித்தாலே வறுமையை முற்றிலும் அழிக்கலாம்... தேவையற்ற செயல்களுக்கு செலவழிக்கும் சிறிதை இயலாதோருக்கு கொடுப்பதால் அவர்களில் இறைவனை காணலாம்..
   உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி, உடல் மெலிந்து வற்றி வாடி பட்டினி கிடக்கும் அதேவேளையில்... ஆடம்பர ஆடை அணிந்து கேளிக்கை விருந்து சமைத்து உண்ணத் தெரியாதவர் போல் குப்பை கூடையில் வீசி எறிபவர் எத்தனை பேர் ... உணவுக்கு பஞ்சமில்லை இங்கே.. உணர்விற்கே பஞ்சம் உண்மையில்.. பசிக்கு உணவை கேட்பவனை ஏளனமாகவும், பகட்டுக்கு பால் பொழிந்து சாக்கடையில் நிரம்ப விடுதலை பெருமைக்குரிய செயலாகவும் எண்ணும் எண்ணம் சிலர் மனதில் நிலைத்து விட்டது...
  அவர்களும் வாழ பிறந்தவர்களே... ஏளனம் செய்யாமல் ஏற்று மகிழுங்கள்... விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர அலங்காரம் செய்து அடுத்த நாள் குப்பையாக வீசி எறியும் பொருட் செல்வத்தை உணவாக்கி இயலாதோர்க்கு கொடுங்கள்.... வாழும் வாழ்வு குறைவானதே... அதில் சேர்க்கும் பணத்தை விட செய்யும் சேவையே நிலைக்கும்... வறுமையை நீக்க உணர்வுடனும் உணவுடனும் களம் இறங்குவோம்... வருங்கால சமுதாயம் வளமாகட்டுமே...

Friday, September 28, 2018

பெண்மையின் வலி (மை)

பெண்மையின் வலி (மை) உணர்ந்திடுங்கள் தோழர்களே... பெண்கள் என்ற பதம் போக பொருளல்ல.. அவள் ஒரு தாய் , தாரம், சகோதரி, தோழி, காதலி என பல பரிணாமங்களில் உங்களுடன் வியாபித்திருக்கும் ஓர் உறவு... தாயின் வழி தோன்றி சகோதரிகளுடன் கூடி பிறந்தும் கூட பெண்மையின் மென்மையை உணராமல்... சொல்லால் அவள் உணர்வினைகாயப்படுத்தி அதனால் பலன் காணமுடியுமா...
    பெண் என்றால் காமம் மிளிர்ந்த ஓர் உருவம் மட்டும் கண்களில் தெரியுமா...யார், என்ன, எப்படி என அறியாமலேயே வீசப்படும் வார்த்தைகள் அவர்கள் தாய்க்கும், சகோதரிக்கும், மனைவிக்கும், மகளுக்கும் யார் மூலமாகவோ வந்து சேரும் என்பதை உணர்வார்களா...
    பெண் ஓர் அட்சய பாத்திரம்... கள்ள மற்ற அன்பை காட்டுங்கள் அவள் ஆயிரம் மடங்கு அன்பை அர்பணிக்க காத்திருப்பாள்... மாறாக அனல் கக்கும் வார்த்தைகளால் போகம் போக்கும்  உணர்வோடு விளையாடும் மிருகங்களை என்ன செய்ய ... அஞ்சி ஓடி ஒளிய வேண்டுமா.. மூலையில் முடங்கி அழ வேண்டுமா..
   பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பது எதில் எழுந்துள்ளது... சமூக வலைதளத்தில் கண்ணியமான போர்வை போர்த்திக் கொண்டு.. தனிமையில் தவறாக பேசுவதிலா.... ஆண் பெண் வேறுபாடின்றி நட்பின் திறனையும் சிந்தனை சிரத்தையும், அன்பின் வலிவையும் அறியும் இடத்தில் அற்ப உணர்வுகளால் காயப்படுத்த உலாவும் மிருகங்களை கண்டு மனம் கொதிக்கிறது...
  ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல... உற்ற தோழியாக ' உடன் பிறவா சகோதரியாக கள்ள மற்ற அன்பில் கரைந்து போதும் உள்ளம் ஏராளம்... அதில் புல்லுருவியாக , பூந்தோட்டத்தில் விசசெடியாக சில அற்ப உள்ளங்கள் அங்கும், இங்கும் அலைந்து திரிகிறது...ஒரு பெண்ணிடம் தவறாக பேசி அவள் அன்பை பெற முயற்சிப்பதை விட... குழந்தை உள்ளத்தோடு பழகி பாருங்கள் அன்பின் வடிவாய் அவள் ஒளிர்வதை உணரலாம்..... அவள் தேகம் பார்த்து முரணாகாமல் ... அவள் உள்ளம் கண்டு நலம் காக்கும் அரணாகுங்கள்... ஒரு பெண்ணிடம் கண்ணியம் காப்பதே ஆடவர் இலக்கணம்.... தனிப்பட்ட முறையில் தகாத வகையில் பேசப்படும் சில வார்த்தைகளால் அவள் மனம் குமறும் தீயில் அந்த அற்பங்களின் ஆண்மையும், வீரமும் வீழ்ந்து மாளும் என்பதே உண்மை... ஆணோ பெண்ணோ வலிமையான நட்பை தாருங்கள்.... நட்பென்ற போர்வையில் நஞ்சை ஊட்டி வலியை தராதீர்... பெண்மையை மதிக்காவிடினும்... அவள் மென்மையினை மிதிக்காதீர்!!!!!

Tuesday, September 25, 2018

அன்பின் வலிமை..

அன்பின் வலிமை...அன்பின் வலிமை என்னவென்றால்.... பணம், பதவி, இனம், வயது, நிறம், நாடு இன்ன பிற என எதுவும் மறந்து நம்மை ஒரு குழந்தையாய் கூட்டுக்குள் அடைப்பதுதான்... உண்மை அன்பு எதையும் எதிர்பாராதது... அதற்கு உருவம் கிடையாது... உணர்வு மட்டுமே... அதற்கு தேடுதல் கிடையாது... திடிரென உள்ளுக்குள் ஊற்றாய் பெருகும்... அதற்கு முகவரியும் இல்லை... முகவுரையும் இல்லை.. முடிவுரையும் இல்லை... யார் மீது , எதற்காக, ஏன் என்ற பதங்கள் அங்கு சிதைந்து பொருளற்று போகின்றன.... மிகைப்படியான அன்பு உரிமையாகிறது... உரிமை உறவை வரவாக பெற துடிக்கிறது... சிறு குழந்தையாக மாறி சிணுங்குகிறது... தமக்குரியவர் மீது பிறர் அன்பு செலுத்துகையில் பொங்கி எழுந்து போராடுகிறது... தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள மனதோடு மன்றாடுகிறது... அப்படியான அன்பு உள்ளம் ஒன்று உங்களுக்கு கிடைத்து விட்டால் அதை பொக்கிஷமாய் பாதுகாத்திடுங்கள்... கை நீட்டி ஓடி வரும் குழந்தை போன்ற அதை தட்டிவிட்டு கடந்து செல்லாதீர்... தொலைத்து விட்டு தேடி திரியாதீர்... பின்னாளில் அது கிடைக்காமலும் போகலாம்... உண்மை அன்பை உதாசினபடுத்தி எந்திரம் போல் வாழ்வதை பெருமையாக நினைத்து மனதை மறுத்து போன கல்லாக்காதீர்... உங்களுக்காக உண்மையாக ஒரு துளி கண்ணீரை அன்பாக பரிசளிக்கும் ஓர் உறவு அமைந்து விட்டால் வாழ்வில் வெற்றி அடைந்ததாக உணரலாம்.. அத்தகைய அன்பு மனதை மென்மையாக்குவதோடு வலிமையுமாக்கும்... வலிமை வளமாக்கி மனதை தெளிவுபடுத்தி வாழ்வை வசந்தமாக்கும்...

Monday, September 24, 2018

எண்ணத்தின் உயர்வு ...

உயர்வான எண்ணம் வளர்த்திடுவோம்.... எண்ணம் உயர்ந்தால் எதுவும் உயரும் ... தாழ்ந்த எண்ணங்களால் நம்மையும்  தாழ்த்திக் கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்த கூடாது.... உயர்ந்த எண்ணம் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் துணை சேர்த்து வெற்றியை பெற்று தரும்...புலம்புவதோ, பிறர் கருணையை பெற முயற்சிபதோ நம்மை தனித்து செயல்படவிடாது.... இறுதி வரை யாரையேனும் சார்ந்து வாழு(டு)ம் சூழலுக்கு தள்ளிவிடும்.... நம்மை பற்றி நமக்கே ஒரு உயர்ந்த சிந்தனை வரவேண்டும்.... யாருடைய பிரதிபலிப்பாகவோ நகலாகவோ நாம் இருக்க கூடாது... நாம் நாமாக இருக்க வேண்டும்... நமக்கென்று தனிப் பாதை வகுக்க வேண்டும்... பிறரோடு ஒப்பீடு எல்லை மீறி செல்ல கூடாது... யாரோ ஒருவருக்கு நேர்ந்ததுன்பத்தையோ, துயரத்தையோ கண்டு முற்றிலும் வாழ்வை வெறுமையாக நினைக்க கூடாது... நமக்கான வாழ்வு சரித்திரம் எழுதபட்டு கொண்டிருக்கும் அதை சரியான பாதையில் பயணிக்க செய்வது நம் எண்ணங்களே...
       சிலருக்கு துன்பமானதாக அமைந்த வாழ்வு மற்றவருக்கு இன்பமாகிறது... இதன் சாரம் எண்ணமே... எண்ணத்தின் தெளிவும், உயர்வும் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிறைவை தருகிறது ... பிறர் பற்றிய ஒப்பீட்டில் வாழ்வை புறக்கணிப்பவர் கோழைகளே... தன்னை பற்றிய உயர்ந்த எண்ணம், ஆற்றலின் மீதான நம்பிக்கை எல்லாம் நம்மை உயர்த்தும்... பிறரை உதாரணமாக பார்த்து நகல் எடுக்காமல் நாமே உதாரணமாக மாறும் அளவிற்கு உயர்ந்த எண்ணம் வளர்க்க வேண்டும்... நமக்கு நாம் தான் நண்பன், குரு எல்லாமே ... தன்னம்பிக்கை எண்ணம் இழந்து விட்டால் எத்துணை துணை இருந்தாலும் தனித்து வினை ஆற்ற இயலாமல் பிணை கைதிபோல் அடைபட நேரிடும்.... உயர்ந்த எண்ணம் வளர்த்து எண்ணியதை திண்ணமாக செயலாற்றும் போது வண்ணமான வாழ்வை பெறலாம்...

கிராமத்தில் ஓர் நாள்....

பயணங்களில் சில மட்டுமே நினைவு சுவடுகளாக மாறி அசை போட வைக்கின்றன... நகரத்தின் சாயலை கடந்து கிராமத்தின் வாயலுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அது ஒரு சுகமான அனுபவமாக மாறி விடுகிறது... பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைப்பது ஒரு வரம்... அதிலும் அதன் வழி இயற்கையை காணும் போது அது மாபெரும் வரமாக உருபெறுகிறது... பசுமை படர்ந்த அடர்ந்த மரத்தில் செக்க சிவந்த அழகிய மலர்கள்.. சாலையோரம் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்... மலர்களே மயங்கி நோக்கும் படி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் .. இவை அழகிலும் அழகு... யாவர்க்கும் அன்னையாக விளங்கும் பசு தன் கன்று துள்ளி விளையாடுவதைக் கண்டு களிப்புடன் பாதி புல்வாயில் வைத்தப் படி மெல்லவும் விழுங்கவும் இயலாதவாறு மெய் மறந்து நிற்கும் காட்சி... சீருடை அணிந்த இராணுவ வீரனை போல மிடுக்குடன் வைக்கோல் மீது நிற்கும் சேவல் ... தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் முனைப்பில் பசி மறந்த கோழிகள்... தென்றல் காற்றின் தழுவலால் தலையசைக்கும் வயல்வெளி பயிர்கள்.. பச்சை பயிர்கள் தன்னை தான் அழைக்கிறதோ என நினைப்பில் அதன் அருகே ஓடும் பறவைகள்... இதை கண்ட தென்னை மரம் நகைப்பது போல் பலமாக தலை அசைக்கும் காட்சி.. அதன் அசைவால் தேங்காய்கள் விழ அதைக் கண்டு மர நிழலில் ஓய்வுக்காக படுத்திருந்த ஆட்டுக்குட்டிகள் ஓட்டம் பிடிக்கும் காட்சி...காற்றில் வெடித்து பறக்கும் பருத்திக்காய்கள் வெண்மேகம் கீழே இறங்கி வந்தது போல தோன்றும் அற்புதக் காட்சி.. நிறை மாத கர்பிணி போல பரிவு கொள்ள வைக்கும் குழை தள்ளிய வாழை மரங்கள்... எது நடந்தால் எனக்கென்ன என்று ஓரமாய் படுத்து அசைப்போடும் பொறுமையின் சிகரமாம் எருமை மாடுகள் ... இவ்வாறு ரசிக்க எத்தனை எத்தனை... பயணத்தின் நிறைவாய் கிராமத்தின் எல்லை முடிந்து நகரத்தின் தொல்லையாம் இரைச்சலும் , நெரிச்சலும் வரவேற்க பேருந்து முன்நோக்கி பயணிக்க .. என் மனம் மட்டும் மீண்டும் பின் நோக்கியே பயணிப்பது ஏனோ ...

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை ... அது என்ன தாழ்வு மனப்பான்மை .. எதற்காக தாழ்வு மனப்பான்மை ... தன் எடையை காட்டிலும் எட்டு மடங்கு எடையை தூக்கி கொண்டு சென்று வருங்கால வாழ்வுக்கு சேர்த்து வைக்கும் எறும்பிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... யார் உதவியும் இன்றி மிகச் சிறந்த பொறியாளர் போல கூடு கட்டும் சிறு தூக்கணாங்குருவியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. எத்தனை முறை விழுந்து எழுந்தாலும் மீண்டும் தன் வலையை  பின்னி முடிக்கும் சின்னஞ் சிறுசிலந்தியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... பல்வேறு பூக்களில் இருந்து தேனை சேகரித்து தேன் கூட்டினை வடிவமைக்கும் தேனியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. இவைகளுக்கு இருப்பது தன்னம்பிக்கை... இவைகளை விட பன்மடங்கு உடலும், உள்ளமும் பலம் வாய்ந்த மனிதர்களுக்கு ஏன் தாழ்வு மனப்பான்மை .. முடியும் என்ற வார்த்தைக் கொண்டு வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழியை தேடுவோம்... இயலும் என்ற வார்த்தையால் இனிமையை கூட்டுவோம்... தன்னம்பிக்கை எனும் சுடர் கொண்டு தாழ்வு மனப்பான்மை எனும் இருளை மருள் அடைய செய்வோம்... பணமோ, பதவியோ, அழகோ எதும் நிரந்திரம் இல்லாத போது அதைக் கொண்டு தாழ்வு மனப்பான்மை ஏனோ... இருப்பதைக் கொண்டு சிறப்பு செய்து தனக்கென ஒரு திறமையை வளர்த்துக் கொண்டால் தாழ்வு மனப்பான்மை தலை கவிழ்ந்து ஓடுவதைக் காணலாம்...

காதல் நிலை

     இணைந்திருந்து காணும் போது...
இல்லாத காட்சி கூட இருப்பது போல் தோன்றும்...
காணாத காட்சி கூட கலை வடிவாய் தோன்றும்...
ஊதாத குழலும் இன்னிசையை வழங்கும்...
பேசாத மெளனம் கூட பேருரையாய் முழங்கும்...
பாலை நிலத்திலும் முப்போகம் விளையும்...
வெண்மேகம் கூட அடை மழையை பொழியும்...
இது காட்சி பிழையல்ல...
இதயத்தால் பின்னப்பட்ட காதல் வலை...

Sunday, September 23, 2018

கடவுச் சீட்டு

"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... "திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... கடவுச் சீட்டை சுமந்துக் கொண்டே கடந்து செல்கிறது அவனது இயல்பு வாழ்க்கை....

ஆறுதல் மொழி

         ஆறுதல் மொழி வழங்க பழகுவோம்... 
   பிறர் துன்பத்தை வேறு வகையில் சரி செய்ய இயலாவிடினும் ஆறுதல் மொழியாலே தேறுதல் செய்வோம்... பிறர் துன்பம் கண்டு எள்ளி நகைக்காமல்...புறக்கணித்து செல்லாமல் ... ஆறுதல் கூறுங்கள்... இந்த உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு மிடுக்காக திரிந்தாலும் யாவரும் எதிர்பார்ப்பது இனிய ஆறுதலான வார்த்தைகளை தான்... அது புண்பட்ட உள்ளங்களுக்கு மாபெரும் மருந்து... ஆறுதல் மொழிகளும் தேறுதல் வார்த்தைகளும் துன்ப நிலையை பாதியாய் குறைக்கும்....
         வாழ்வு ஒரு வட்ட பாதை இதில் இன்பம் துன்பம் இரண்டையும் கடந்தே யாவரும் பயணிக்க வேண்டும்... ஒரு சில நேரங்களில் பிறரின் சோக சரித்திரம் கூட மற்றவருக்கு ஆறுதலாகும்... உள்ளம் என்பது எல்லையில்லா எண்ணங்களில் விரிவடைந்துக் கொண்டே முடிவிலா பயணம் செய்வது.... அது முடிவில் எதிர்பார்ப்பது ஆறுதலைதான்... துன்பத்தின் உச்சத்தில் வேகத்தில் செல்லும் மனதிற்கு வேகதடையாக ஆறுதல் மொழி அமைந்து தேற்றி வெற்றி பாதைக்கு வழிகாட்டும்... கனிவான மொழி கண்ணீரை துடைத்திடும்... ஆறுதல் மொழி அன்பை வளர்த்திடும்....
           எத்தகைய கடின மனதிற்குள்ளும் கை நீட்டி அழுது ஆறுதல் தேடும் குழந்தை ஒன்று அலைந்துக் கொண்டு தான் இருக்கும் ... அதுவே உண்மை... அதை தூக்கி சமாதானம் செய்யுங்கள்... கடின மனதும் மென்மையாக மாறுவதை உணரலாம்...
Image may contain: 1 person

காதல் கலை

அவள் வாட்டத்துடன் காத்திருக்க!!
அவன் ஓட்டமாய் ஓடி வர!!
அவளது காத்திருந்த கண்கள் தெளிவு பெற!!
அவனது பட படத்த இதயம் அமைதி பெற!!
ஏக்கத்தில் காத்திருந்த அவள் மூச்சும்!!
வேகத்தில் விரைந்து வந்த அவன் மூச்சும்!!
ஒன்றென கலந்து மாலைத் தென்றலை வெப்ப சலன மாற்றம் செய்தாலும்!!
பொங்கி வரும் அன்பின் வெள்ளம் குளிரூட்டி சீர் செய்வது!!
காலநிலையின் மாற்றமா!!
காதல் கலையின் தோற்றமா!!
Image may contain: flower, plant, bird, nature and outdoor

Saturday, September 22, 2018

நட்பு இலக்கணம்

எதிரிக்கோ!!நட்புக்கோ!!இலக்கணம் எழுதி வைக்கப்படவில்லை... எதிரியும் நண்பனாகலாம்.. நண்பனும் எதிரி ஆகலாம்... நிரந்தரமற்ற வாழ்வில் இது தான் என அறுதியிட்டு கூறிட எதுவும் இல்லை... சூழலோடு ஒன்றி அதே நேரத்தில் கட்டுப்பாடோடு வாழ கடமைப்படுவோம்... யார் மீதும் அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அளவு கடந்த அன்பையும் வைத்திடல் ஒரு வித முட்டாள் தனமும் கூட... அன்பு கொண்ட இதயங்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வு இது.. ஆனால் இந்த எதிர்பார்ப்பு அதிக நேரம் ஏமாற்றமே தரும்... யார் மீதும் அதிக வெறுப்பும் ஏற்பட்டு விட கூடாது.. அவர்களும் திருந்தி திரும்ப வரலாம்... அன்பு குறைந்திடும் நிலையில் அதை வற்புறுத்தி கட்டாயமாக பெறுவது.. இனித்திருந்த கனியை கசக்கி எடுத்து நசுக்கிவிடுதல் போல.. அவ்வாறு கட்டாயத்தில் பேரில் பெறப்படுவது அன்பும் அல்ல.. எதிர்ப்பையும் வஞ்சம் வைத்து பழி தீர்க்க துடிக்க கூடாது... நிகழும் எதுவும் நன்மைக்கே என்ற கோட்பாடோடு வாழ்வை நிகழ்த்தி செல்லும் மனப்பான்மையை வளர்த்திக் கொள்ள வேண்டும்... எதுவும் கடந்து போகும் அதுவே வாழ்க்கை... நாம் எதை எதிர்பார்த்தாலும், அன்பு செய்தாலும், ஆசைப்பட்டாலும், எதிர்ப்பு காட்டினாலும் நடக்கும் நிகழ்வுகள் நடந்தே தீரும் எனற வாழ்வின் உச்சக்கட்ட நிலையை உணர்ந்துக் கொண்டால்.. இவை அனைத்தும் பொருளற்றதாக தெரிவதை உணரலாம்... முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை மூளைக்கு கொண்டு செல்லாமல் ... அமைதியும் , தெளிவுமான சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்... அந்த மனநிலை நம்மையும் உயர்த்தி நம்மை சார்ந்த யாவையும் உயர்த்தும்..

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை வளர்த்திட முனைவோம்... தன்னம்பிக்கையும் சுயசார்பும் தான் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும்.. யாரும் இல்லை என புலம்பும் ஒரு சாரார்... இருந்தும் பயனில்லை என புலம்பும் மற்றொரு சாரார்... நம்மை தவிர யாரும் நம்மை புரிந்துக் கொள்ள முடியாது.. நமது திறமை என்ன.. நாட்டம் என்ன.. வலு என்ன.. எதை நோக்கி சென்றால் ஒளிரலாம் என பிறரால் கூற இயலாது.. சுயசார்பும் தன்னம்பிக்கையும் நமக்குள் எழும் வினாக்களுக்கு பதிலளித்து நம்மை முன்னேற்றி செல்லும்.. உலகில் உயர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த அனைவரும் யாரையும் சார்ந்திராத சூழலில் வளர்ந்தவர்களே.. அவர்களால் மட்டுமே தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.. பிறரை சார்ந்திருப்பவர்கள் கூட்டுக்குள் அடைப்பட்ட பறவை போன்றவர்கள்... தற்சார்பு சிந்தனை கொண்டவர்கள் காட்டில் வளரும் பறவை போன்றவர்கள்.. சுதந்திர உணர்வையும் தற்சார்பு சிந்தனையே உருவாக்கும்... பறவைகளில் மற்ற பறவைக்கும் கழுகுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு... அது தன்னம்பிக்கை மிக்கது... மழை வந்தால் மற்ற பறவைகள் கூட்டைத் தேடி ஓடும் கழுகு உயர பறந்து மழை மேகங்களுக்கு மேலே செல்லும்... தோல்வியை கண்டு துவளாது.. இயற்கையாக எய்தும் முதுமையைக் கூட வென்று மறுபிறவி எடுக்கும்.. முதுமையுற்ற தனது இறகுகளையும் , நகங்களையும் தானே சிரமபட்டு அகற்றிவிட்டு மீண்டும் புது சிறகுடன் மறுபிறவி எடுக்கும்... தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்கும்... அது போல தான் தன்னம்பிக்கை கொண்டவர்களின் வாழ்வும் ... ஆதரவு இல்லாதவர்களே ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த இயலும்... சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற இயலும்...புலம்பி வாழ்நாளை வீணாக்கி கூட்டுக்குள் முடங்காமல் தன்னம்பிக்கை எனும் சிறகை விரித்து பறந்திடுவோம்.. நம்மால் ஒரு புது உலகம் படைக்கப்படுவதை உணரலாம்.