Monday, September 24, 2018

கிராமத்தில் ஓர் நாள்....

பயணங்களில் சில மட்டுமே நினைவு சுவடுகளாக மாறி அசை போட வைக்கின்றன... நகரத்தின் சாயலை கடந்து கிராமத்தின் வாயலுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அது ஒரு சுகமான அனுபவமாக மாறி விடுகிறது... பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைப்பது ஒரு வரம்... அதிலும் அதன் வழி இயற்கையை காணும் போது அது மாபெரும் வரமாக உருபெறுகிறது... பசுமை படர்ந்த அடர்ந்த மரத்தில் செக்க சிவந்த அழகிய மலர்கள்.. சாலையோரம் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்... மலர்களே மயங்கி நோக்கும் படி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் .. இவை அழகிலும் அழகு... யாவர்க்கும் அன்னையாக விளங்கும் பசு தன் கன்று துள்ளி விளையாடுவதைக் கண்டு களிப்புடன் பாதி புல்வாயில் வைத்தப் படி மெல்லவும் விழுங்கவும் இயலாதவாறு மெய் மறந்து நிற்கும் காட்சி... சீருடை அணிந்த இராணுவ வீரனை போல மிடுக்குடன் வைக்கோல் மீது நிற்கும் சேவல் ... தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் முனைப்பில் பசி மறந்த கோழிகள்... தென்றல் காற்றின் தழுவலால் தலையசைக்கும் வயல்வெளி பயிர்கள்.. பச்சை பயிர்கள் தன்னை தான் அழைக்கிறதோ என நினைப்பில் அதன் அருகே ஓடும் பறவைகள்... இதை கண்ட தென்னை மரம் நகைப்பது போல் பலமாக தலை அசைக்கும் காட்சி.. அதன் அசைவால் தேங்காய்கள் விழ அதைக் கண்டு மர நிழலில் ஓய்வுக்காக படுத்திருந்த ஆட்டுக்குட்டிகள் ஓட்டம் பிடிக்கும் காட்சி...காற்றில் வெடித்து பறக்கும் பருத்திக்காய்கள் வெண்மேகம் கீழே இறங்கி வந்தது போல தோன்றும் அற்புதக் காட்சி.. நிறை மாத கர்பிணி போல பரிவு கொள்ள வைக்கும் குழை தள்ளிய வாழை மரங்கள்... எது நடந்தால் எனக்கென்ன என்று ஓரமாய் படுத்து அசைப்போடும் பொறுமையின் சிகரமாம் எருமை மாடுகள் ... இவ்வாறு ரசிக்க எத்தனை எத்தனை... பயணத்தின் நிறைவாய் கிராமத்தின் எல்லை முடிந்து நகரத்தின் தொல்லையாம் இரைச்சலும் , நெரிச்சலும் வரவேற்க பேருந்து முன்நோக்கி பயணிக்க .. என் மனம் மட்டும் மீண்டும் பின் நோக்கியே பயணிப்பது ஏனோ ...

No comments:

Post a Comment