Friday, September 28, 2018

பெண்மையின் வலி (மை)

பெண்மையின் வலி (மை) உணர்ந்திடுங்கள் தோழர்களே... பெண்கள் என்ற பதம் போக பொருளல்ல.. அவள் ஒரு தாய் , தாரம், சகோதரி, தோழி, காதலி என பல பரிணாமங்களில் உங்களுடன் வியாபித்திருக்கும் ஓர் உறவு... தாயின் வழி தோன்றி சகோதரிகளுடன் கூடி பிறந்தும் கூட பெண்மையின் மென்மையை உணராமல்... சொல்லால் அவள் உணர்வினைகாயப்படுத்தி அதனால் பலன் காணமுடியுமா...
    பெண் என்றால் காமம் மிளிர்ந்த ஓர் உருவம் மட்டும் கண்களில் தெரியுமா...யார், என்ன, எப்படி என அறியாமலேயே வீசப்படும் வார்த்தைகள் அவர்கள் தாய்க்கும், சகோதரிக்கும், மனைவிக்கும், மகளுக்கும் யார் மூலமாகவோ வந்து சேரும் என்பதை உணர்வார்களா...
    பெண் ஓர் அட்சய பாத்திரம்... கள்ள மற்ற அன்பை காட்டுங்கள் அவள் ஆயிரம் மடங்கு அன்பை அர்பணிக்க காத்திருப்பாள்... மாறாக அனல் கக்கும் வார்த்தைகளால் போகம் போக்கும்  உணர்வோடு விளையாடும் மிருகங்களை என்ன செய்ய ... அஞ்சி ஓடி ஒளிய வேண்டுமா.. மூலையில் முடங்கி அழ வேண்டுமா..
   பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பது எதில் எழுந்துள்ளது... சமூக வலைதளத்தில் கண்ணியமான போர்வை போர்த்திக் கொண்டு.. தனிமையில் தவறாக பேசுவதிலா.... ஆண் பெண் வேறுபாடின்றி நட்பின் திறனையும் சிந்தனை சிரத்தையும், அன்பின் வலிவையும் அறியும் இடத்தில் அற்ப உணர்வுகளால் காயப்படுத்த உலாவும் மிருகங்களை கண்டு மனம் கொதிக்கிறது...
  ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல... உற்ற தோழியாக ' உடன் பிறவா சகோதரியாக கள்ள மற்ற அன்பில் கரைந்து போதும் உள்ளம் ஏராளம்... அதில் புல்லுருவியாக , பூந்தோட்டத்தில் விசசெடியாக சில அற்ப உள்ளங்கள் அங்கும், இங்கும் அலைந்து திரிகிறது...ஒரு பெண்ணிடம் தவறாக பேசி அவள் அன்பை பெற முயற்சிப்பதை விட... குழந்தை உள்ளத்தோடு பழகி பாருங்கள் அன்பின் வடிவாய் அவள் ஒளிர்வதை உணரலாம்..... அவள் தேகம் பார்த்து முரணாகாமல் ... அவள் உள்ளம் கண்டு நலம் காக்கும் அரணாகுங்கள்... ஒரு பெண்ணிடம் கண்ணியம் காப்பதே ஆடவர் இலக்கணம்.... தனிப்பட்ட முறையில் தகாத வகையில் பேசப்படும் சில வார்த்தைகளால் அவள் மனம் குமறும் தீயில் அந்த அற்பங்களின் ஆண்மையும், வீரமும் வீழ்ந்து மாளும் என்பதே உண்மை... ஆணோ பெண்ணோ வலிமையான நட்பை தாருங்கள்.... நட்பென்ற போர்வையில் நஞ்சை ஊட்டி வலியை தராதீர்... பெண்மையை மதிக்காவிடினும்... அவள் மென்மையினை மிதிக்காதீர்!!!!!

3 comments: